Monday, 12 March 2018

சீதாலியா அந்த சீதைக்கு மட்டுமல்ல
இந்த சீதேவிக்கும் தான் என்றேன்
போதாதடா எனக்கு பொத்திக்கோ
எனை இன்னும் இன்னும் என்றாய்

தாங்காதடி உந்தன் தளிர்மேனி
தானென்றேன் ஓங்காரமாய் நீ
அருகிருக்க எனக்கு, றீங்காரமாய்
ஒலிப்பேன் நானுனக்கென்றாய்

வாங்காத பெரு மூச்சு தூங்காமல்
நாம் இழைத்து பூங்காவில் தான்
நுழைந்த இரு வண்டாகத்தான்
இசைந்து பூண்டோமே அருவிருந்து

கண்ணாடி முன்னாடி என் பின்னாடி
தான் நின்று சொல்லாடி விளையாடி
தோள்மீது கரம்சூடி தள்ளாடி தடுமாறி
தடம்மாற்றி கொன்றாயே கில்லாடி

அசராது அயராது அரைநொடியும்
விலகாது அதுவாகி மதுவாகி ஏன்
அலைகடலில் படகாகி சுடராகி
ஒளியாகி சூட்சமத்தின் பொருளாகி

கலையாடி கவிபாடி கச்சிதமாய்
கையாடி கருவாகி உருவாகி என்
கண்ணெதிரே களவாடி கண்டபடி
கொண்டாடி தின்றாயே வாயாடி

இதுவெல்லாம் நடந்தேறி இன்னல்
பலகடந்தேறி யன்னல்கள் மெருகேறி
எந்த மின்னல்கள் துளைத்தாலும் நம்
வண்ணங்கள் அழிந்திடுமா போடி !

1 comment: