Sunday, 30 November 2014

மனித மனங்கள்

இருப்பது போதும் என்பவன் ஒருத்தனும் இல்லை
கொடுப்பதைத் தடுப்பவன் நிலைப்பதும் இல்லை
வாலாட்டிப் பிழைப்பவன் மனிதனும் இல்லை
பன்னீரில் குளிப்பவன் கண்ணீரை மதிப்பதில்லை
போராட மறுப்பவன் சரித்திரம் படைப்பதில்லை.. !

என் உயிரே நீ தான்

அன்பே என் நிழலே நீயான போது
உன் நினைவுகள் கரைந்தோடுமா
உன்னை மறக்கின்ற நிலை வந்தால்
என் உயிர் பிரிந்ததென்று பொருளானதே
எனை மண்ணில் புதைக்கின்ற போதினிலும்,
உன் நினைவுகளே என் கல்லறை சுவராகுமே

பொய் சொல்லப்போறேன்


பொய் சொல்லப்போறேன்
பொய் சொல்லப்போறேன்
பொறுப்பேதும் இல்லாமல்
நான் பொய் சொல்லப்போறேன்
பருப்போ நீ என நினைக்காமல்...
விருப்போடு கதை கேட்டு
வெறுப்பேதும் இல்லாமல்
நீங்கள் கருத்து சொன்னால்
நான் மறுப்பேதும் இல்லாமல்
பொய் சொல்ல வாறேன்.... !!!

குணங்களின் கோலங்கள்

தகறாறு பிடித்தவள் தட்டெடுத்து கொடுக்க
அகங்காரம் பிடித்தவள் ஆரத்தி எடுக்க
விதண்டாவாதம் பிடித்தவள் விளக்கேற்ற
பிடிவாதம் பிடித்தவள் பின்னிருந்து தள்ள
அடங்காப்பிடாரி சிலைபோலே நின்றாளாம்

உலக்கையை உளியாக்கும் உறவுகள்

முருங்கை மரத்தில் இருக்கை செய்து உறவை
அமர்த்த நினைக்கும் மனதினிலே, நறுக்கப்பட்ட
உணர்வுகளில் துட்டெடுத்து உலக்கை செதுக்கி
உளிப்பிடியான கதையும் நானே................ !

கிழவியின் கும்மாளம்

நிலவில் உடைந்த துண்டு
மணலில் விழுந்ததென்று
கரையில் வாழ்ந்த நண்டு
கவிதை வடிக்கக் கண்டு
நரிகள் மயக்கம் கொண்டு...
தரையில் புரண்டதென்று
குருடன் கதையை கேட்டு
கிழவி நடனம் போட்டாள் !

சீராக இருப்பதா நேராக நடப்பதா


சீராக இருப்பவன் காணாமல் போகின்றான்
நேராக நடப்பவன் வீணாகப் போகின்றான்
தீயாக எழுபவன் தீக்கிரை ஆகின்றான்
தீராது உழைப்பவன் சோறின்றிச் சாகின்றான்
சோத்துக்கு உழைப்பவன் சேற்றில் வாழ்கின்றான்...
ஊருக்கு உழைப்பவன் கூத்தாடி ஆகின்றான்
உறவாக நினைப்பவன் உயிரையே எடுக்கின்றான்
கொடுத்து தின்பவன் கோமாளியாகின்றான், ஐயஹோ
கெடுத்து பிழைப்பவன் கொழுத்துத்திரிகிறான்........!!!
 

வடுக்கள்

கசக்கியெறிந்த காகிதம் கூட கவிதை வடிவில்
ஆயுதம் ஆகலாம், புறத்தீ பேசும் மரத்த நெஞ்சில்
கறுத்த மையால் இழுத்த கோடுகள் .... !!!

மூடர்கள்


புகை நடுவிலே பகை இருப்பதாய்
விதை விதைக்கிறாய்
உயிர் இல்லாமல் உடல் கிடப்பதாய்
பறை சாற்றுகிறாய்
உறவே அறுந்து தான் போனதாய் ...
உற்சாகம் கொள்கிறாய்
உலகே எதுவென்று புரியாத மூடர்கள்
ஓலங்கள் போடுகிறார்
வேற்று உலகத்தில் கூத்து நடப்பதை
ஆந்தைகள்அறிந்திடுமோ
பார்த்து சிரிக்கின்ற கூட்டுத் தலைகளின்
பித்தம்தெளிந்திடுமோ
சத்தங்கள் போட்டால்தான் முத்தங்கள் என்று
சாத்திரம் ஒன்றுமில்லை
முற்றத்தில் பூக்கவும் முத்ததில் வியர்க்கவும்
சத்தங்கள் தேவையில்லை
நான் ஒற்றையில் நிற்பதாய் நீ சத்தங்கள்
செய்வதால் நம் ஒற்றுமை சாவதில்லை...!!!

புதிர்

தெரியாத விடையத்தை புதிர் போட்டு செல்வதும்
புரியாத மொழியிலே பரிகாரம் சொல்வதும்
விடியாத பொழுதுக்கு திரை போட்டு மறைப்பதும்
அறியாத மூடரின் முறைகெட்ட செயலாகும்....

ஓட்டுப்போட்டு ஓடாய்த் தேய்ந்து போனோமே

ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓடாய்த் தேய்ந்து
போனோமே
எல்லா ஓட்டும் இங்கே இப்போ செல்லா
ஓட்டாயானதே
போட்ட ஓட்டின் உரிமை எல்லாம் எங்கள்...
உயிரைத்தானே கொல்லுதே
நியாயம் நீதி நலிந்த போதும் நாவடக்கம்
இல்லையே
நாளை மலரும் பொழுது என்ற நம்பிக்கையும்
போனதே
ஏனோ தானோ என்று மக்கள் தொடர்ந்தும் ஓட்டுப்
போடுதே
நடந்து போகும் பாதை கூட விழுந்து எழும்ப
வைக்குதே
கடந்து போன காலம் கூட இதற்கு மருந்து போட
மறந்ததே.

என்னவளும் நீயல்லவா


செந்தமிழில் சொல்வடித்து தேனமுதில்
தொட்டெடுத்து கட்டழகி உன் வகிட்டில்
முத்தமாக இட்டிடவா
மல்லிகையில் மலர் கொய்து தங்கத்திலே
அதைத்தடவி மங்கை உந்தன் தலை கோதி...
மாலையாக சூடிடவா
திங்களிலே ஒளிபறித்து சந்தனத்தில் அதைக்
குழைத்து வஞ்சி உந்தன் மேனியெங்கும்
மருதாணி பூசிடவா
முக்கனியில் சாறுபிழிந்து சக்கரையில் தான்
கலந்து வித்தகி உன் சொக்கயிலே முத்திரையாய்
பதித்திடவா
பாலருகில் கொடி வளைத்து பவளங்களை அதில்
கோர்த்து முத்தழகி இடுப்பினிலே ஒட்டியாணம்
கட்டிடவா
இந்திரன் சபையினிலே சந்திரன் தலைமையிலே
ஏழுலக அழகியென்று ஏட்டிலே பதியும்படி
கட்டளையிட்டிடவா
மண்னுலகுக்கே காணிக்கையாய் மாந்தர்களில்
மாணிக்கமாய் விண்ணுலகே அஞ்சி நிற்கும்
என்னவளும் நீயல்லவா
 

என் உயிரே நீ



என் உயிரே நீ குழந்தையாகவே இருப்பதால்
நானும் குழந்தையாகிறேன்
உன் சிறுபிள்ளைத்தனத்தினிலும் சிணுங்கலிலும்
இணைந்திருக்க,
அக்கணத்தில் இருந்தேனும் எனை நீ திட்டாது...
அன்போடு அணைப்பாயென
உன் பிடிவாதங்கள் பலகோடி அதில் நான் பித்தானது
உனக்குத் தெரியாதோடி.. ???
 

நர்த்தனத்தின் நடுவினிலே

நர்த்தனத்தின் நடுவினிலே நானும் இல்லை
மெத்தனம் ஒன்று தானோ உந்தன் எல்லை
சித்தாந்தம் பயில்விக்கப் போவதுமில்லை
தத்துவம் கேட்டு நான் வாழ்வதும் இல்லை
முத்திரை பதிப்பதாய் நீயும் எண்ணி சத்தியம்
தவறுவதும் நியாயம் இல்லை........................!!!

வெந்த நெஞ்சம்

உருக்குலைந்து போகும் உறவின் நிலைதனிலே
கருக்கலைந்து காதல் கண்ணீரில் வாடுகின்றதே
செருப்படிபோல் செவிமொழி புகுந்த சொல்லில்
நெருப்பினில் விழுந்து நெஞ்சம்தான் வெந்ததே ...

சொர்க்கத்தில் நாம்

பக்கத்திலே நான் இருக்க வெக்கத்திலே
நீ குளிக்க
சொர்க்கதிலே நமக்காக குத்தகைக்கு
இடம்பார்க்க
செவிகளிலே சத்தமின்றி சங்கீதம் ...
நான் படிக்க
சிறகடிக்கும் இதழோரம் தேன் குடிக்க
நான் தவிக்க
அறியாத உன் விழியோ அங்குமிங்கும்
தான் துடிக்க
மொத்தத்தையும் மெத்தையிலே முத்ததாலே
மொழிபெயர்க்க
முத்தத்தின் சத்ததிலே மெத்தையிலே
நீ நெழிய
நடமாடும் உன் இடையில் நான் இதமாக
சுழுக்கெடுப்பேன்......

உடைந்த இதயம்


சிலந்தி வலையில் சிங்கம் சிக்கி
செத்துப்போனதா சரித்திரம் உண்டோ
பறந்து போகும் பருந்தை பிடித்து
விருந்து வைத்தல் தகுமோ
உடைந்து போன குவளைக்குள்ளே...
வடிந்து ஓடும் நீரைப் போலே
கடந்து செல்லும் கால்கள் கண்டு
இடிந்து போகா இதயம் எதுவோ.... ?

நான்


உரசினால் தேய்பவன் இல்லை நான்
அலசினால் கரைபவன் இல்லை நான்
மோதினால் உடைபவன் இல்லை நான்
வீசினால் தொலைபவன் இல்லை நான்
வெட்டினால் வீழ்பவன் இல்லை நான்...
தட்டினால் சாய்பவன் இல்லை நான்
ஊதினால் அணைபவன் இல்லை நான்
தீயென எரிபவன், எனை ஒட்டிக்கொண்டால்
உன்னை கட்டிக் கொள்வேன் இல்லை
முட்டிப் பார்த்தால் உன்னை.........................!!!

நான் கிறுக்கும் ஓவியம்

நான் கிறுக்கும் இடமெல்லாம்
உன் முகத்தின் ஓவியமே
நாள்தோறும் என் நினைவில் நீ
ஆடும் தோரணமே
என் உயிரில் கலந்தோடும் உன் ...
உயிரில் வாழ்கின்றேனே
நீ பிரிந்து சென்றாய் என்றால் என்
உடலும் தீக்கிரையே

நான் நானாக தான் இருப்பேன்



நீ ஏகலைவனாக இரு, ஏன் பீஷ்மராக
முயற்சி செய் .. ஆனால் என்னை
துரியோதனன் ஆக்கிவிடாதே
துயிலுரியும் கொள்கையில் நான் இல்லை.!

உயிர் இல்லா ஓவியம் நான்



உயிர் இல்லா ஓவியம் நான்
கதிர் இல்லா சூரியன் நான்
கரு இல்லா காவியம் நான்
பொருள் இல்லா கவிதை நான்
செருப்பு இல்லா கால் கொண்டு
நெருப்பு மீதி நடக்கும் சித்தெறுப்பு நான்