Monday, 12 March 2018

மிச்சங்கள் சொச்சங்கள்
அச்சங்கள் ஆனபின்
உணர்ச்சியை ஏலம் கேளு

எந்தனை உந்தனை
எண்ணிடும் போதிலே
எத்திசை என்று கூறு

கற்பனை ஒப்பனை
ஒன்றுமே இல்லையேல்
விற்பனை செய்தா வாழ்வு

நிம்மதி நிற்கதி நிலையற்ற
சொல்மதி நிஜமற்ற ஒன்றெனில்
நின்மதி தேடி ஓடு

ஊனினை உயிரினை
தீயினில் இட்டபின்
சுவற்றினில் மாலை சூடு

சாவினை நாவினால்
ஏவிய நன்னெஞ்சே
சாவியை தூக்கிப் போடு

பேச்சினை நிறுத்தினால்
மூச்சினை இழப்பதாய்
நெஞ்சில் வண்ணக்கோடு

கற்பமாய்த் திகழ்ந்தது
சர்ப்ப தோசமாய் மாறிட
யார் இட்ட சாபக்கேடு

போலியும் வேலியாய்
பொறுப்புற்றிருந்ததைப்
பார்த்துமா இந்தக் கூற்று

கர்வத்தின் உச்சத்தில்
மனம் கைவீசி நடந்தது
கனவுடன் ஒத்துப்போச்சு

சங்கடம் தீர்த்திட சாய்ந்திட்ட
மார்பினை வெந்தணல் தின்றபின்
வெறும் சாம்பலை அள்ளிப்பூசு

கற்றதும் உற்றதும் இனி
கருவினில் இல்லையேல்
காறித்தான் உமிழ்ந்து செல்லு

நம்பிக்கை நாணயம்
நடிப்பினில் உண்டெனில்
நர்த்தனம் ஆடிக்கொல்லு

மொத்தமும் சொல்லமுன்
மூச்சுத்தான் அடைக்குதே
முன் ஜென்மம் என்ன ஆச்சு ?

No comments:

Post a Comment