நிலவில் ஒளியெடுத்து
நினைவில் ஒட்டி வைத்து
நிஜமாய் வாழ்கிறாய்
எந்தன் நிழலும் நீயாகி
நித்திரையும் களவாடி
முத்திரைகள் பதிக்கிறாய்
உன் சித்திரமும் நானாகி
சொத்துரிமை தானாக்கி
வித்தகியாய் வாழ்கிறாய்
எப்பிறப்பிலும் எனதாகி
முப்பொழுதும் தேனாகி
எப்பொழுதும் சுவைக்கிறாய்
சொப்பனத்திலும் காணாத
சொந்தமாய் வந்தென்னை
சொர்க்கத்தில் தள்ளிவிட்டாய்
கண்ணுக்குள் பொத்திவைத்தால்
கனவாகிப் போகுமென்று,.. என்
நெஞ்சுக்குள் பூட்டி வைத்தேன்
உள்ளுக்குள் இருந்துகொண்டு
என் உயிரோடு கலந்து நின்று
உறவாடும் நுண்ணுயிரே
மண்ணுலகம் தான் மறந்து
விண்ணுலகம் நான் அடைந்து
வெண்ணிலவில் வாழ்கிறேன்
பெண் வடிவில் தான் வந்த
பொன் மலரே நீ எந்தன்
கண்ணிமையை மூடவிடு !

No comments:
Post a Comment