Tuesday, 9 February 2016

நான் யாருக்கு சொல்லி அழுவேன்


நான் யாருக்கு சொல்லியழ
என் ஊருக்குப் பில்லியென
கரையோரம் நடக்கையிலே
நுரை நுரையாய் பறக்குதாமே
...
வடிச்ச கஞ்சி குடிக்கையிலே
பொரிச்ச மீனு மணக்குதாமே
இடிச்சு வச்ச சரக்குக்குள்ளே
இஞ்சி வாசம் காணமாமே

ஊற வைச்ச துணிகூட காயவச்சு
கிடக்குமாமே...... தோச்சு மடிச்சு
வச்ச உடுப்பெல்லாம் ஊத்தையில
மிதக்குமாமே, அடியாத்தி இதுமட்டுமா

நாத்து நட போகயிலே ஏதோ ஒன்று
சேத்துக்குள்ளே ஓடி ஒழிக்குதாமே
தேடி ஓடிப்பார்க்கையிலே தேவாங்கு
போலே உள்ளே மறையுதாமே.....

இதெல்லாம் சுடலை மாடனுக்கு
சுகமான வேலையாமே காட்டேரி
குடும்பத்துக்கும் கொள்ளிவால்
குஞ்சுக்கும் கைவந்த கலையாமே

காளைமாடும் காயப்போட்ட ஒடியலும்
பழுக்கவைச்ச மாங்காயும் துருவி வச்ச
தேங்காயும் காணாமல் போவதற்கும்
இவையள் தான் காரணமாமே

உதெல்லாம் அதுகள் வேலையெண்டு
உடையாராச்சி உருவந்துசொன்னபின்னே
உதுக்குமேல நான் என்னசொல்ல என்று
அன்னக்கிழவி அடிச்சு சொல்லிச்சாமே

எல்லாம் சேர்த்து வைச்சு பார்க்கையிலே
எனக்கு சோத்துக்குள்ளே கைவைக்க
வேர்த்து வடியுதே ஐயோ நான் யாருக்கு
சொல்லியழ என் ஊருக்குப் பில்லியென !
 

No comments:

Post a Comment